Posted On செப்ரெம்பர்13, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது jkr

Comments Dropped leave a response


தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்

இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் ? அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே ?

ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை !

இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப, உடனடியாக களத்தில் குதிக்கின்றன பல பதில்கள். எல்லோரும் பல்வேறு வழிமுறைகளை கைவசம் வைத்திருக்கின்றனர்.

இப்படிச் சாவது வலியற்ற சாவு. இப்படிச் சாக செய்யவேண்டியவை இவை, தற்கொலைக்குத் தேவையான இந்தப் பொருட்கள் இந்த இடங்களில் கிடைக்கின்றன. இந்த முறையில் சாக நினைப்பது உசிதம் ஏனெனில் சில மணி நேரங்களில் இறந்து விடலாம்.

இப்படி ஏராளமான அதிர்ச்சியூட்டும் வழிமுறைகள் தற்கொலையை உற்சாகப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரையில் நான் விளக்க விரும்பாத அந்த வழிமுறைகளில், திரைப்படங்களில் நாம் பார்த்துப் பழகிய தற்கொலை வழிகள் முதல் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி நவீன முறைகள் வரை உள்ளன என்பது பகீர் பயங்கரம்.

“நன்றி… இது தான் என் விலாசம். நான் தற்கொலை செய்யப் போகிறேன்.” சொல்லி விட்டு விடைபெறுகிறான் ஒரு பதின் வயது இளைஞன். கடமையில் கருத்தாய் இருப்பதாய் கருதிக் கொண்டு செத்துப் போகிறான்.

எல்லோரும் அவனை உற்சாகமாய் வழியனுப்பி வைக்கிறார்கள். ஒரு உயிர் அநியாயமாய் செத்துப் போகிறது. அதன் பின்னணியில் எழும் ஒரு குடும்பத்தின் அழுகுரலைப் பற்றிய எந்த விதமான உறுத்தலும் இன்றி விவாதம் தொடர்கிறது.

“நான் தனியா தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். யாராவது சேர்ந்து தற்கொலை செய்யலாம் வருகிறீர்களா?”  அழைப்பு விடப்படுகிறது. உடனே உற்சாகமாக கும்பல் சேர்ந்து விடுகிறது.

அந்த கும்பல் ஐந்து பேரோ, ஐம்பது பேரோ குவிகின்றனர். தங்களுக்குள்ளாகவே எப்படிச் சாவது ? எங்கே சாவது ? எப்போது சாவது என பேசி முடிவெடுக்கின்றனர்.

அனைவரும் கை கோர்த்துக் கொள்கிறார்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதெல்லாம் பரபரப்பூட்டும் திரைக்கதையோ, நாவலோ அல்ல. அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் உள்ளம் பதறுகிறது அல்லவா?

உலகெங்கும் இத்தகைய இணைய தளங்கள் தற்கொலை விரும்பிகளால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் மட்டும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இணைய தளங்கள் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறுப்பினராக இருக்கும் பல இணணய தளங்கள் உள்ளன. இத்தகைய தளங்கள் பலரை தற்கொலைக்கு வழியனுப்பி வைத்துக் கொண்டே இருக்கின்றன.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில், யாரேனும் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாகச் சொன்னால் உடனே தற்கொலையே தீர்வு என பலர் அறிவுரை செய்கின்றனர்.
யாரும், தற்கொலை செய்ய வேண்டாம் என்றோ, அது தவறு என்றோ சொல்வதே இல்லை. எப்போதேனும் எழும் சிறு சிறு குரல்களும் வெளிவராமல் அடங்கிவிடுகிறது.

தற்கொலை செய்வதா ? வேண்டாமா எனும் மனநிலையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் இத்தகைய தளங்களில் வந்தால் செத்துப் போவது உறுதி என்கின்றனர்.

சுமார் பதினொன்று முதல் இருபத்து ஐந்து வரையிலான வயதினரே இத்தகைய தளங்களில் இணைந்து விவாதிக்கின்றனர். இத்தகைய இணைய தளங்களின் கொடிய விளைவாக ரஷ்யாவில் மாதம் ஒன்றுக்கு சுமார் இருபது பதின் வயதினர் தற்கொலை செய்து கொள்கின்றனர், மிக மிக மகிழ்ச்சியுடன்.

இந்தத் தளங்களில் இணைபவர்களில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு அவர்கள் தங்கள் அனுபவங்களை இதில் பதிவு செய்கின்றனர்.

இப்படிப்பட்ட தளங்கள் வேறு விதமான முகமூடி அணிந்து நல்ல பிள்ளையாய் காட்சியளிப்பதால் இதை தடை செய்யும் வழியும் தெரியாமல் விழிக்கின்றனர்.

பதின் வயது துடிப்புடனும், உற்சாகத்துடனும் செலவிட வேண்டிய வயது. இந்த வயதில் தற்கொலை செய்ய வேண்டும் எனும் எண்ணம் ஏன் இவர்களுக்கு வருகிறது என்பதற்கு உளவியலார் பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர்.

முதலாவதாக, எங்கும் நிறைந்திருக்கும் பதின் வயதுக் காதல். அவனோ, அவளோ இல்லையேல் வாழ்க்கை இல்லை என நினைக்கும் முட்டாள்தனமான பாலியல் ஈர்ப்புகள் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. பெரும்பாலும் பெண்கள் இத்தகைய வசீகர வலையில் சிக்கி தற்கொலையே தீர்வு என முடிவெடுத்து விடுகின்றனர். 

இரண்டாவதாக பெற்றோருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பதின் வயதினரை சட்டென உணர்ச்சி பூர்வமான முடிவுக்குள் தள்ளி விடுகின்றன. தனக்குத் தண்டனை தந்த பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் எனும் உணர்வு நிலை உந்துதல் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

மூன்றாவதாக சகவயதினரின் கேலி, கிண்டல், படிப்பில் ஏற்படும் தோல்வி, இயலாமை என சிறி சிறு பலவீனங்களின் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.

நான்காவதாக, மரணத்துக்குப் பின் வாழ்க்கையில் ஏதோ மிக மிக அதிக சந்தோசமும், சுவர்க்கமும் இருக்கின்றன எனும் நம்பிக்கை. என்னதான் இருக்கிறது என்பதை அறிய வேண்டுமே எனும் ஆவல். பதின் வயதினரின் ஆர்வக் கோளாறு தற்கொலைக்குத் தூண்டுகிறது.

இந்த இணைய தளங்களில் சென்று தற்கொலை செய்வதாக சொன்னால் மனம் மாற வாய்ப்பே தராமல் கூடவே நின்று சாவதை உறுதி செய்து விடுகின்றனர். குறிப்பாக குழுவினராக தற்கொலை செய்ய நினைப்பவர்கள் இடையில் விட்டு விலக வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் மற்ற தற்கொலை விரும்பிகளின் கட்டாயம்!

கடந்த முப்பது வருடங்களில் இந்த தற்கொலை விகிதம் முப்பது மடங்கு அதிகரித்திருப்பதாக ரஷ்ய இணைய தளம் ஒன்று தெரிவிக்கிறது.

நவீனயுகம் பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது, அவை நன்மையின் பாதையிலும், தீமையும் பாதையிலும் தடங்களைப் பதித்துக் கொண்டே செல்கிறது. தண்ணீர் விடுத்து பாலை எடுக்கும் சங்க கால அன்னப் பறவை போல தீமை விடுத்து நல்லதை எடுக்க வேண்டியது அவசியம்.

பதின் வயதுப் பருவம் என்பது மதில் மேல் அமர்ந்திருக்கும் பூனையைப் போன்றது. அது சரியான திசையில் குதிப்பதும், குதிக்காததும் குடும்பத்தினரின் அரவணைப்பையும், வழிகாட்டுதலையும் பொறுத்தது.

பின்னூட்டமொன்றை இடுக